அதே போல, சிறு நிறுவன கடன்களில், வட்டி கட்டவும், தவணைகளைச் செலுத்தவும், 90 நாட்கள் விடுமுறை கொடுக்க, ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும். தனிநபர் கடன்களை மறுசீரமைத்துக் கொள்ளவும், கால அவகாசத்தை நீட்டித்துக் கொள்ளவும்

இந்தியாவில் கொரோனா பரவுகிறது. அச்சமும் பெருகி வருகிறது. பொருளாதாரம் ஸ்தம்பித்து விடும் போல் தோன்றுகிறது. எதிர்காலம் பற்றிய குழப்பம், சமூகத்தையும் சந்தையையும் உலுக்குகிறது. இந்த சூழலை நாம் சந்திப்போம் என்பது தெரிந்ததே. அதேசமயம், நமக்கு இருந்த எதிர்பார்ப்பு, இதன் தாக்கம் அதிகம் இருக்காது என்பதே. இந்த எதிர்பார்ப்பு சரி அல்ல. கொரோனா ஒரு பொருளாதார சூறாவளியை விட்டுச் செல்லும் என்பது உறுதி. அதை முதலில் ஏற்று, அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்போம்.


 


 


பன்முக கொள்கை:



பொருளாதாரம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப, அதிக பணம் புழங்கச் செய்ய வேண்டும். இந்த ஆண்டில், 4 முதல், 5 லட்சம் கோடி ரூபாய், செலவு செய்ய வேண்டிய கட்டாயம் அரசுக்கு இருக்கிறது. பட்ஜெட்டில் குறிப்பிட்ட பற்றாக்குறையை அதிகப்படுத்துவதை தவிர வேறு வழியில்லை. ஏற்கனவே வளர்ச்சி குறைவாக இருந்த நேரத்தில் வந்த கொரோனா தாக்கத்தை, அரசு ஒரு வாய்ப்பாக எடுத்து, மக்கள் வாழ்வாதாரத்தை சரி செய்ய வேண்டும். முதலீடுகள் பெருகி, வேலை வாய்ப்பு ஏற்பட வழி செய்ய வேண்டும். இதற்கு ஒரு பன்முக கொள்கை போக்கை அரசு கையில் எடுக்க வேண்டும். சமூகத்தின் நலிவுற்ற பகுதிகளை, மிக கவனமாக இந்த நேரத்தில் பாதுகாத்து, முன் நடத்தும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. இதை, பல வழிகளில் செய்யலாம்.


 

 


 


 


ஏழைகளுக்கு உணவு:



மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஏற்கனவே அரசு வழங்குகிறது. வாழ்வாதார இழப்பிற்கு, அரசு சில மாதங்களுக்கு, நேரடியாக பணம் வழங்க வேண்டும். டி.பி.டி., முறையில், பணத்தை நேரடியாக வேலை இழந்தோருக்கும், வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்போருக்கும் வழங்க, தேவையான நிதி கட்டமைப்பு தயாராக இருக்கிறது. நோய் பரவுவது ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன், இந்த நடவடிக்கைகள் வேகமாக அமல்படுத்தப்படும் என்று நம்புவோம்.


 


 


நிர்பந்தம்:



சிறுதொழில் மற்றும் சுய வேலைவாய்ப்பு கொண்டிருப்போருக்கு, அரசு, இந்த தருணத்தில் பல வகைகளில் உதவ வேண்டும். அவர்கள் செலுத்த வேண்டிய, ஜி.எஸ்.டி., வரியை, 90 நாட்கள் விடுமுறை காலத்தோடு, எந்த அபராதமும் இன்றி கட்ட வழி செய்ய வேண்டும். அதேசமயம், அரசு, அவர்களுக்கு தர வேண்டிய பணத்தை உடனடியாக கொடுத்து, பெரு நிறுவனங்களையும் அதே போல் வழங்கச் செய்ய வேண்டும். சிறு தொழில்களிடம் பெறும் பொருட்களுக்கும், சேவைகளுக்கும், 30 நாட்களுக்குள் பணம் கொடுக்க வேண்டும் என்று தன்னையும், தொழில் துறையையும் அரசு நிர்ப்பந்திக்க வேண்டும்.


 


 


முடிவு:



அதே போல, சிறு நிறுவன கடன்களில், வட்டி கட்டவும், தவணைகளைச் செலுத்தவும், 90 நாட்கள் விடுமுறை கொடுக்க, ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும். தனிநபர் கடன்களை மறுசீரமைத்துக் கொள்ளவும், கால அவகாசத்தை நீட்டித்துக் கொள்ளவும், தவணை அளவை குறைத்துக் கொள்ளவும் அனுமதி வழங்க வேண்டும். இத்தகைய அசாதாரண பொருளாதார சூழலை, மக்கள் முழு நம்பிக்கையுடன் எதிர்கொள்ள, அரசு பல துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டும்.

அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் ஒரு பொருளாதார பேரிடராக, இந்த கொரோனா வைரசை அரசு எதிர்கொண்டால், ஏற்கனவே உள்ள மந்த சூழலையும் கடக்கும் நம்பிக்கையும், தைரியமும் மக்கள் மனதில் உருவாகும். அதை, அரசு முன்னின்று ஏற்படுத்தி, வருங்கால வளர்ச்சி விரைவாக திரும்ப வழி செய்யும் என்று நம்புவோம்.