இந்தியாவில் கொரோனா பரவுகிறது. அச்சமும் பெருகி வருகிறது. பொருளாதாரம் ஸ்தம்பித்து விடும் போல் தோன்றுகிறது. எதிர்காலம் பற்றிய குழப்பம், சமூகத்தையும் சந்தையையும் உலுக்குகிறது. இந்த சூழலை நாம் சந்திப்போம் என்பது தெரிந்ததே. அதேசமயம், நமக்கு இருந்த எதிர்பார்ப்பு, இதன் தாக்கம் அதிகம் இருக்காது என்பதே. இந்த எதிர்பார்ப்பு சரி அல்ல. கொரோனா ஒரு பொருளாதார சூறாவளியை விட்டுச் செல்லும் என்பது உறுதி. அதை முதலில் ஏற்று, அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்போம்.
பொருளாதாரம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப, அதிக பணம் புழங்கச் செய்ய வேண்டும். இந்த ஆண்டில், 4 முதல், 5 லட்சம் கோடி ரூபாய், செலவு செய்ய வேண்டிய கட்டாயம் அரசுக்கு இருக்கிறது. பட்ஜெட்டில் குறிப்பிட்ட பற்றாக்குறையை அதிகப்படுத்துவதை தவிர வேறு வழியில்லை. ஏற்கனவே வளர்ச்சி குறைவாக இருந்த நேரத்தில் வந்த கொரோனா தாக்கத்தை, அரசு ஒரு வாய்ப்பாக எடுத்து, மக்கள் வாழ்வாதாரத்தை சரி செய்ய வேண்டும். முதலீடுகள் பெருகி, வேலை வாய்ப்பு ஏற்பட வழி செய்ய வேண்டும். இதற்கு ஒரு பன்முக கொள்கை போக்கை அரசு கையில் எடுக்க வேண்டும். சமூகத்தின் நலிவுற்ற பகுதிகளை, மிக கவனமாக இந்த நேரத்தில் பாதுகாத்து, முன் நடத்தும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. இதை, பல வழிகளில் செய்யலாம்.